ஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)

Wednesday, October 17, 2012

விறகுக் கட்டைகளாய் அடுக்கிக் கிடக்கிறோம் நாங்கள்
ஆறடி நிலம்தான் எமக்கு என்று உணர்ந்து கிடக்கிறோம்
பரந்த அறைகளின் உருண்டு படுத்த உடம்புகள்
சகோதர பாசத்தில் இன்று ஊறப்போட்ட உறவுகளாகிறோம்.

நடுச்சாமத்தில் நண்பனின் காலை பெட்சீட்டால் மூடி
அடுப்பெரிக்காமல் சூடாகவரும் தண்ணீரை வாளியில் நிரப்பிவிட்டு
அதிகாலை குளிரை மறந்து அவசரமாய் குளித்துவிட்டு
'கர்வா' பஸ்ஸிற்காய் அரைமணி நேரம் காத்து நிற்பதும் சுகம்தான்

பழைய பத்திரிகை தாள்களை நெடுக்காக விரித்து படுக்கவைத்து
காத்துக்கு பறக்காமல் பாரத்திற்கு அல்மேரா ஜூஸ் போத்தலில் தண்ணி நிரப்பி
சோத்தினை பாத்தி கட்டி அளவாக அழகாக அகப்பையால் பரப்பிவிட்டு
இடைக்கிடையே பொரியலும் சுண்டலும் புது மாப்பிளையாய் வீற்றிருக்கும்

சம்மணம் கோரி சிலரும் முழந்தாளிட்டு சிலரும் சுற்றியிருந்து
சிந்தாமல் சிதறாமல் சிரிப்புடன் சோற்றினைப் பிசைந்திடும் போது
சுமைகளாய் சேர்ந்திருந்த கவலைகள் அனைத்துமே அதனோடு
பிசைந்து தொண்டைக்குள் இறங்கிடும் நிம்மதிப் பெருமூச்சுடன்

சொந்த நாட்டிலிருந்து வந்த மிக்சரும் கடலையும் கலந்துகிடக்க
வாட்டிய இறைச்சியும் சுங்கான் கருவாடும் விரிச்சுக்கிடக்க
எங்கள் மனசுகளெல்லாம் வரண்ட வானம் பார்த்த பூமியாய்
வீட்டினை சுற்றுகின்றது அன்பான உறவுகளைத் தேடி..

எங்களுக்கு சொர்க்கம் இந்த நாலு சுவர்களுக்குள்ளேதான்
இது சுவர்களல்ல எங்கள் உணர்வுகளை சுமந்து நிற்கும் உறவுகள்
இது கட்டில்கள் அல்ல எங்கள் மனச்சுமைகளை இறக்கிவைக்க
இறைவனாய்ப்பார்த்து வழங்கிய அருட்கொடை



அதிகாலை வகுப்பினிலே (கல்முனையான்)

Friday, August 3, 2012

-அதிகாலை வகுப்பினிலே-

கருவறையில் இருக்கும் குழந்தை போல்
இருளறையில் உறங்குகிறது நான் கொடுத்த கணக்கு
திரிகோண கணிதமும் நூர்ந்த திரியான போது
கொழுத்திவிட கொழுந்துவிட்டது அதிகாலை வகுப்பு

வழமையாய் வந்த பதில்களில் வழுக்கி விழுந்து
நானும் மையொற்றுப் பேனாவில் மையல் கொண்டு
வெண்பலகையிலே கிசு கிசு பேசி முடிக்கும் வரை
கையிலே பேனையுடன் கனவு காணும் சகோதரங்கள்

சத்திர சிகிச்சைகளில் முத்திரை பதித்த கொப்பிகளும்
அதற்கு வைத்தியம் செய்யு கையிலே பேனையுடன்
அடிக்கடி தலை சொறிந்து யோசிப்பதாய் நடித்து
பின் முடித்து என்னிடம் காட்டும்போது அரைச்சாமம் முடிஞ்சிருக்கும்

முக்தி பெற்ற கணக்கொன்றை சித்தி பெற நாடி
சுத்தி நின்று தீர்க்கையிலே அடிக்கடி கத்திடுவேன் நானும்
புத்தி சொல்லி சக்தியெல்லாம் ஊதுபத்தியாகி
காற்றோடு ஆவியாகும் நானும் வகுப்புதனை முடிக்கையிலே..

கடைக்கண் திறக்காத காதல்

Sunday, January 22, 2012



புத்தம் புது இதயமொன்று வாடகைக்காய் வந்திருக்கு
குடி புக நினைத்தவர்கள்  சீக்கிரமாய் வந்திடலாம்
வெளிச்சமும் தண்ணீரும் தாராளமாய் தானிருக்கு
அடிக்கடி காற்றுவாங்க நுரையீரலும் அங்கிருக்கு

இதயத்தின் சொந்தக்காரன் நானாய் இருந்தபோதும்
வாடகைக்கு நீ வந்தால் நான் என்ற ஒன்று நாமாகிவிடும்
ஆம் என்று நீ சொன்னால் இதய அறைகளின் இருட்டினிலே
ஒட்டடை சாம்ராஜ்ஜியத்தை தூசுதட்டி துடைத்திடுவேன்.

இரத்த நாளமென்ற அதி வேக பாதையிலே நீயும்
அன்புக் கஞ்சியினை அளவோடு அழகாக ஊற்றிவிட
இதயச் சோனைகளும் ஈரலிப்பில் உப்பிவிட
ஓரத்தில் சங்கமிக்கும் எதிர்பார்த்த எண்ணத்துடன்

பேரழகி நீயென்று ஊரெல்லாம் ஓலமிட்டு
ஒப்பாரி வைக்கின்ற மல்லிகையின் மருதமான மணமும்
என் நாசி வழியே பாசியாய் படிந்துவிட்டு
மூளையின் மூலையிலே முனகுகிறது முக்தி பெற்று

என் அரும்பிய மீசையில் பட்டம் விடும் பதினாறு வயசு
ஏதோ பார்வை என்ற நூல் கொண்டு பறக்க விட
காதல் என்ற வால் தேடி உலகமெலாம் நான் அலைய
இன்னும் கிடைக்கவில்லை வாலும் செழிக்கவில்லை வாழ்வும்.

நடக்கமுடியாத நதிகள்

பெண்ணாய்ப் பிறந்ததனால் புண்ணாய்ப் போனவர்கள் நாங்கள்
சுரண்டிவிட்ட சொரணையிலே கரண்டியிட்டு ருசி பார்க்கப்படுபவர்கள்
அமாவாசை இருட்டினிலும் அம்மா ஆசை மறந்தவர்கள்

புண்ணிய பூமியிலே கண்ணியமாய் பிறந்திருந்தும்
இன்னும் அந்நியமாய் அலைபாயும் ஆதாமின் தோட்டத்தின்
அழகான ஆப்பிள்க் கனிகள் நாங்கள்

முக்தி பெற்ற யமுனையிலும் சக்தி பெற்ற கங்கையிலும்
சளைக்காமல் பெண்மையின் மணம் வீசும் போது
இன்னும் அடுப்படியில் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடலைக் கலக்கிவிட்டு எங்கள் கர்ப்பத்தில் புகுத்திவிட்டு
அர்ப்பமாய் தூரத்தில் நின்று பெண்ணியம் பேசுகின்ற
பேதைகளின் போதைப் பேச்சினிலே புதைந்து விட்டோம்

நதியாக நாமிருந்து வாழ்க்கைப் படகினை ஓடவிட்டும்
அதோ!..கதியாக நடுவினிலே நாமிருக்க
நடக்க முடியாத நொண்டிகளாய்  ஊர்ந்து செல்கிறோம் ஊர் ஊராய்...


சமுதாயம்(கல்முனையான்)

Tuesday, July 12, 2011


இதயத்தின் இடுக்குகளில் இலைமறையாய் வாழ்கின்ற
இளமையின் இரண்டாம் ஜென்மப் பிறப்பினைப்போல்
அடிக்கடி புனர் ஜென்ம்ம் எடுக்கின்ற ஏழைக் குலத்தின்
ஆறாவது அறிவாய் ஆக்ரோசிக்கிறது என் சமுதாயம்.

முதியோரைக் கண்டால் மரியாதை செய்து பழக்கப்பட்ட
சின்னஞ் சிறு பிள்ளைகளின் சிறகடித்த சிந்தனைகள்
இன்று கால் மேல் கால் போட்டு சரிசமமாய் பழகும்
பக்குவப்பட்ட சமூகத்தின் பாசாங்கு வேசங்களாயிற்று.

மாணாக்கராய் கண்சிமிட்டும் மனித குலக் கொழுந்துகளின்
கல்விப்பாதைகளை முளையிலேயே கிள்ளிவிட்டு
சினிமாவின் மோகத்தில் சிலிர்த்துவிட்ட மேனியினை
தட்டிக்கொடுத்துவிட்டு எட்டிப்பார்க்கும் எட்டப்ப சமூகம்.

நவீனத்து இளவல்களை நாகரீக சாயம் புசி
நாட்டு நடப்பினையும் வீட்டுப் பொறுப்பினையும்
குழியினுள்ளே இறுமாப்பாய் கொட்டிவிட்டு போதை என்ற
மாயக் குகையினிலே மல்லாக்க படுக்கவைக்கும் சமூகம்.

பெண்மை என்ற உண்மையின் வெண்மையை அறியாது
சோஷலிசக் கொடியின் கீழ் ஆடைகளின் கஞ்சத்தனமும்
பார்வைகளில் காமத்துளியை கரைத்துவிட்ட வீராப்புமாய்
வெறிச்சோடிப்போன நெஞ்சங்களாக்கும் சமூகம்

முதியோர்கள் என்ற முன் மாதிரியை முறித்துவிட்டு
அநாதை விடுதிகளில் அம்மாக்களும் அப்பாக்களும்
அலைமோதும் அருவருப்பான அடையாளங்களை
முத்திரை பதித்து முக்தி பெற்ற என் சமூகம்.

சிறார்கள், மாணாக்கர், இளைஞர்கள், பெண்கள், முதியோர்
போன்ற சமூகத்தின் ஐம் புலன்களும் மலடாகி
கொலை, கொள்ளை,கற்பழிப்பு சீழ்கள் வடிந்தோடும்
சாக்கடை சகதியாய் படிந்து கிடக்கிறது சமூகம்.

அரசியல் (கல்முனையான்)


ஆன்மாக்களை அறுத்துப் பிழிந்து மனச்சாட்சியை எரித்து
சுயநலம் என்ற அமிலமூற்றி மைபோல் குழைத்தெடுத்து
சமுதாய மேனியிலே முழுவதுமாய் பூசிவிட்டு ஏமாற்ற வெயிலினிலே
ஆயுள் வரை வெறுமையாய் நிற்கின்ற ஊமை.

வாக்குறுதிகளின் வாய்களெல்லாம் கட்டப்படும் தொழுவமாய்
ஏழைகளின் கண்ணீரால் நிரம்பிவிட்ட தடாகமாய்
பொய்யிலே மையெடுத்து ஊமையின் இமைக்கு மை பூசி
நிர்வானக் குறிக்கோளுடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெடுமரம்

கால் வயிற்றுக் கஞ்சியினையும் கனிவோடு ஏற்கின்ற
ஏழையின் எலும்புகளில் வாக்குச் சீட்டை ஒட்டிவிட்டு
பலகோடி ரூபாய்க்கு வாழ்க்கைப்பட நினைக்கின்ற கோளைகளுக்கு
மனிதனாய் பார்த்து வழங்கும் நிச்சயதார்த்த தாம்பூலத் தட்டு

நேர்மை என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுப்பதற்காய்
விலைக்கு வாங்கப்பட்ட வெள்ளைச்சட்டையுடன்
அடிதடியில் முதுமானிப் பட்டம் முடித்துவிட்டு
இரவிலே காரிகையுடன் தஞ்சம் புகும் இலவச சத்திரம்

ஆக, அரசியல் என்ற பூக்கடையில் சாக்கடையை கலந்துவிட்டு
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கின்ற பெரிய மனிதர்களின்
அந்தப்புரங்களில் ஏழையின் உண்மையான உணர்வுகள் இன்னும் கொத்தடிமையாய்
சிறைப்பிடிக்கபட்டு சின்னாபின்னமாகின்ற நிலை எப்போது மாறுமோ??

நீயும் நானும் (கல்முனையான்)

Wednesday, December 29, 2010

அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !

சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…

அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.

இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”

நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்

பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று

பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்

முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?

வாரிசுகள் (கல்முனையான்)


பூரண நிலவினிலே! என் வீட்டுத் தோட்டத்தின்
எலுமிச்சை செடிகளுக்கும், எலி-மிச்சம் வைத்த வற்றாளை
கொடிகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று

அரிதாரம் பூசிக் கொண்டு அரட்டை அடிக்கின்ற
பாகற் கொடியும் அதன் இறுகிய இணைப்பில்
மயங்கி நிற்கும் மரத்துப்போன கிளிசரியா கம்பும்

தொல் பொருள் நிபுணராய் தன் உடல் பரப்பி
ஆராய்ச்சி செய்யும் வெள்ளரியும் அவருக்கும் உதவியாய்
ஒத்தாசை புரிந்து பூரித்துப்போன பூசணியும்

உரம்திண்ட தெனாவட்டில் திறன் காட்டி நிற்கின்ற
மரவள்ளியும் தரம் கெட்ட காய் என்று
தகுதியுடன் தள்ளிவைக்கப்பட்ட வெண்டிச் செடியும்

வீராவேசம் பேசி வெடுக் கென்று மிடுக்கோடு
நிற்கின்ற கத்தரியும் ஏட்டிக்கு போட்டியாய்
வளர்ந்து வயசுக்கு வந்திருந்த தக்காளியும்

வாழ்த்துக்கள் கூறி வாயாராப்புகழ.. அடுப்படியில்
இருந்து கொண்டு இன்னும் சட்டியினிலே
கனவு காண்கிறனர் வற்றாளைக் கொடியின் வாரிசுகள்.

சந்தா்ப்ப பிராணிகள் (கல்முனையான்)


ஈர வலயத்து அட்டைகளின் மறு பிறப்பாய்
நன்மையை உறிஞ்சி விட்டு நாதியின்றி தவிர்க்கவிடும்
மனிதன் என்ற பெயரிலுள்ள இரண்டு கால்
பூச்சிகளாய் செத்தைகளில் பதுங்குகின்ற மானிடம்

பச்சை இரத்தத்தின் சிவப்பு நிறத்தினிலே காகிதப்
படகு விட்டு தோராட்டம் பார்க்கின்ற பாசாங்க
மனிதா்களின் ஈரமற்ற இதய இடுக்குகளின் ஓரத்திலே
இன்னும் இருக்கிறது சந்தர்ப்பவாதம் என்ற சாக்கடை வடிகான்கள்

சுவாசிக்கும் ஒட்சிசனின் ஓரப்பார்வையிலே ஒடுங்கி
நாசி நீரில் கால் கழுவி வெளியேறும் காபனீரொட்சைட்டிலே
ஈரத் தலையை வீரத்தோடு உலா்த்தி எட்டிப் பார்க்கும்
எட்டப்பக் கூட்டத்தின் ஏழாம் சாமத்து சாத்தான்கள்

எண்ணெய் வடியும் தலையினிலே மண்னை அள்ளி
மலர்க் கோலம் போடும் மானம் கெட்ட மங்கையரின்
அற்கஹோல் பார்வைக்காய் அரை வயிறு சாப்பிட்டு
அலைகின்ற ஆந்தைக் கூட்டத்தி்ன் முகவரிகள்

தார்போட்ட றோட்டினிலே யார் வீட்டில் குழப்பம் என்று
தூர் போட்டு மேய்கின்ற வெள்ளாட்டுக் கூட்டத்தில்
தள்ளாத வயதினிலும் துள்ளாத கால்கலுடன்
தூங்காமல் விழித்திருக்கும் பெருசுகளின் விழிகள்



புறப்படுவாய் என் பிரிய சகோதரனே !!!

Friday, September 3, 2010

உழுத்துப் போன சமுதாயத்தில் புழுத்துப்போன வட்டிதனை
கொழுத்திப்போட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே..
ஆதனத்தை சீதனமாக்கி பின் வேதனமாக்கும் போதனையை
சேதனம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
கலாச்சாரத்தை சிரச்சேதம் செய்யும் அபச்சாரமான விபச்சாரத்தை
சூரசம்ஹாரம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
வறுமைதனை வாழ்வின் உரிமையாக்கிய ஏழைகளின் கண்ணீரை
அருமையாக அழித்திட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
சிந்தையின்றி போர் விந்தை புரியும் மூளையற்ற மந்தைகளை
கந்தையாக்க புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
சேற்றுக்குள் நாற்று நட்டு சோற்றுக்காய் ஏங்குகின்ற ஏழையின்
வயிற்றுக்காய் புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

எதிர்பார்ப்பு

Monday, August 30, 2010



அதிகாலையின் அலைகளுக்குள் சேவலின் சினுங்கல்
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்
என் கட்டிலின் மூட்டைப் பூச்சிகளுக்கு என் இரத்த தானம்
பக்கத்து வீட்டு வானொலியில் பொங்கும் பூம்புனல்...

இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்

எங்கள் முற்றத்து குழாயடியில்தான் என் முதல் எதிர்பார்ப்பு
சொட்டுச்சொட்டாய் வருமா! இல்லை அருவியாய் வருமா! என்று
இஞ்சிபோட்ட தேனீரின் சுவையில் ஏழு மலைகளை
எட்டி உதைக்கும் ஓர் உற்சாகம் எனக்குள்ளே..

மூன்று வருடத்தின் முன் முக்குழித்த என் மூக்குக் கண்ணாடி
அதன் பெயருக்கேற்றால் போல் மூக்குக்கு கண்ணாடிதான் அது
நேற்றைய பத்திரிகையின் பக்கங்களின் உள்ளே
எதிர்பார்ப்புடன் சுழியோடும் போது பழையவைகளின் மறுபிறப்புக்கள்

அடிக்கடி இருமிக்கொள்ளும் என் இதயத்தின் இடிபாடுகள்
ஏதொ ஒரு எதிர்பார்ப்புடன் தன்னந்தனியே ஏங்கி நிற்கின்றது.
வயோதிபர் மடத்தின் என்னை விட்டுச்சென்ற மகனுக்காகவா
இல்லை என்னை அழைத்துச்செல்ல வரும் எமனுக்காகவா....

என் தோழியின் அம்மா....(கல்முனையான்)

Monday, April 5, 2010


பத்து மாதம் என்னை சுமந்த என் அம்மா
ஏனோ என்னை பெற்ற ஒன்பதாம் மாதத்தில் ஒழிந்து கொண்டாய்
எப்படி அழுவது உனை நினைத்து நான்..
உன் புகைப்படம் பார்த்தேன் நானும்
அதில் என் இருப்பிடம் காணேனே என் அம்மா!!!

இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்தில் விட்டுவிட்டு
உச்சத்தில் இருந்து ஒய்யாரமாய் பார்க்கிறாய்
அம்மா உன்னைக் காண நான் கொடுத்து வைக்கவில்லை
அதனால் என்னையும் நீ காணவில்லை
பெருமிதம் அடைகிறேன் அம்மா நான் உன் பிள்ளையாய் ஆனதுக்கு!!!

ஏனம்மா என்னை விட்டு சென்றாய் தனியாக
உன் துணையாக நான் வந்திருப்பேனே அந்த அறியாத வயதினிலே
அன்று எத்தனை தடவை உன்னை அம்மா என்று அழைத்தேனோ தெரியாது
ஆனால் இன்று ஆயிரம் தடவை உச்சரிக்கிறேன் அம்மா அம்மா என்று
என் ஆசை தீர தீராது தாயே என் தாகம் உன் மீது கொண்ட பாசம்

அம்மா எனக்கு நீ வேண்டும் அம்மா மீண்டும் நீ வேண்டும் வருவாயா!
என் ஏக்கம் தீர்ப்பாயா தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து
அந்த இனிமையில் உறங்குகிறேன் உன் புடவைத்தலையணையினுள்
அம்மா என் உயிர் அம்மா இனிக்கிறது உன்னை உச்சரிக்க
அத்துடன் பனிக்கிறது என்ன கண் என்னை நச்சரிக்க.....

பழஞ்சோறு... (கல்முனையான்)

Tuesday, November 17, 2009

நேத்து பொரிச்ச சூடை மீனை சோத்துக்குள் புதைத்து
ஏக்கத்துடன் அண்ணார்ந்தேன் எங்க வீட்டுக் கூரையினை
வாலறுந்த பல்லி ஒன்று சண்டை போடுகிறது
தன் உணவினைத் தட்டிப்பறிக்க மற்றைய பல்லியிடம்...

பல்லியிலுமா!!! இந்தப் பாகப்பிரிவினை
பக்கத்து வீட்டு கோழியிறைச்சியின் தாழிப்பு வாசம்
என்தன் நாக்கின் நடுவிலே நயாகரா நீர்வீழ்ச்சியின்
போட்டோ கொப்பியை ஒட்டியது...

வாசத்தை மட்டும் சுவாசிக்கும் நாங்கள்
வேசத்தையிட்டு வாழ்கிறோம் மனிதர்கள் என்று
கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன் என்னை ஆவலுடன்
வெறும் ஏமாற்றத்தின் விளைநிலமாய் நான்

சுடு சோத்தின் சூட்டினிலே குளிர்காயும் ஏழைகள்
இடியப்பம் சம்பலும் அவர்களுக்கு சொர்க்கத்து உண்டிகள்
பழஞ்சோறாய் நாங்கள் வீதியிலே கொட்டிவிடப்பட
பணக்கார நாய்களெல்லாம் படையெடுத்து வருகின்றன.

பிரசவம் - (கல்முனையான்)

Monday, November 2, 2009

தாயின் கருவறையில் சிறைப்பட்டு
சிசுவாக நாளறியாத பிணையிலே
உலகிற்கு வந்துவிட்டேன்.

என்ன அது.. எல்லோரும் நடக்கின்றனர்
எனக்கும் இருக்கிறதே கால்கள்.
முடியவில்லையே.

ஓ.இன்னும் வருடங்கள்
செல்லவேண்டுமாம் அந்தக் கிழவி
பக்கத்து பெண்ணிடம் சொன்னாள்.

இரண்டு வருடத்தின் பின்
அங்காங்கே என் பாதங்கள் பட்டு
பூமியில் சில காயங்கள்.

என் தலையணி (கல்முனையான்)

Monday, October 26, 2009




காய்ந்துபோன பருத்திப் பஞ்சுகளின் நாளாந்த
பொதுக் கூட்டம் எந்தன் தலையணைக்குள்
அதற்கு மட்டும்தான் தெரியும் என் உடலின்
உள்ளத்தின் உண்மையான சுயரூபம்.

காற்றடைத்த பையாக நானும்
பருத்திப்பஞ்சின் பால்ய சினேகிதனான
என் தலையணையும் அடிக்கடி முத்தமிட்டு
சல்லாபம் புரிவோம் ஒவ்வொரு நாளும்.

எனக்கு வேலை இல்லை என்று என்
வீட்டில் திட்டும் போது என்னை அரவணைத்து
அன்பு காட்டும் என் அம்மாக்கு அடுத்ததாக
என்னை ஆறுதல் படுத்துவது

கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாமே
உன்னை இறுக அணைக்கும் போது
எங்கேயோ தற்காலிகமாய் குறுகிய
விடுமுறையில் சென்றுவிடும்.

என் கண்ணீரையும் பெருமூச்சையும்
விலைக்கு வாங்கி உன்னகத்தே வைத்து
வட்டியும் முதலுமாய் அடுத்த நாள் காலை
அமைதியாய் சலவைக்கு செல்வாயே!!!

உன்னை விட இன்று எனக்கு யாருமில்லை
என்னை அண்மித்த ஜீவனாக
ஆதலால் உன்னை என் தலையணை என்பதை விட
என் காதலி என்றே அழைக்கிறேன் ஏற்றுக்கொள்வாயா!!!!

சீதனம் (கல்முனையான்)

Friday, September 25, 2009



சீதனம்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்

பரிதவிப்பு (கல்முனையான்)

Thursday, September 24, 2009



காமத்தின் ருசி அறியா காரிகையை
கல்யாணம் என்று சொல்லி அவசரமாய் மணமுடித்து
அஞ்சாறு நாளிலேயே அமெரிக்கா
போய்விட்டான் ஆறாத வடுவுடனே

அவனுக்கும் அவளுக்கும் இப்போது
தொலை பேசியில்தான் தாம்பத்யம்
காலை எழுந்தவுடன் உள் வீட்டு கூரை பார்த்து
ஏக்கத்துடன் பெரு மூச்சில் இவள்.

சாப்பிட மனமில்லை எதற்கு சமைக்க
அவள் உள் மனம் பேசுகிறது
சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆசாமி
ரெண்டு வருஷம் காத்திருக்கணுமே...

வெளியிலே சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள் இம் மாது
இவளின் உணர்வுகளை எங்கோ சாக்குப்பையினுள்
ஒளித்துவிட்டு ஒட்டடை அடிக்கிறாள் வீட்டுக்கு..

பாவம் அவள் பரிதாபம் அவள் உணர்வுகள்
சந்தோசம்,அன்பு,பாசம் எல்லாமே
வெறும் நான்கு சுவருக்குள்ளே
நர்த்தனம் ஆடுகிறது நிர்வானத்துடன்...

கருகிய காதல்(கல்முனையான்)



என்னவளை நான் நினைத்த போது
என் கண்ணில் வெறும் கண்ணீர் வந்தது
அவள் என்னை மறந்த போது
எந்தன் நெஞ்சில் இரத்தம் காய்ந்து போனது...

வெறும் மாயையினுள் ஒளிந்திருக்கும் சூட்சுமம்
அதற்கு நாம் வைத்த பெயர் காதலாம்
காதல் தோல்வியுற்றால் அவனின் நரம்புகள் கூட
ஆர்ப்பாட்டம் செய்து வெளியேறுகின்றது உடம்பை விட்டு

காதல் வலியை போக்க அவன் உதட்டிலே
செந் தணலாய் வெள்ளைச்சாரனுடன் சிகரெட்
அதன் பின்னால் சென்ற வெள்ளை வாயு
அவனின் தொண்டையிலே ஒரு தாஜ்மகால் கட்டுகிறது

இவன் சிகரெட் வாங்கும் கடைக்காரன்
சிரிக்கிறான் இவனைப் பார்த்து இவன் அழகைப் பார்த்து
வேறொன்றுமில்லை இவன் வாங்கும் சிகரெட்டுக்கு
இன்னும் அனுமதி கிடைக்க வில்லை இவன் வீட்டில்

காதல் கடனாய் 1987 ரூபாய் இன்னும் இருக்கிறது இன்றுவரை
துணிந்துவிட்டான் இவன் இதயத்தை வட்டிக்கு விட
மாதா மாதமாய் சென்று வட்டி வாங்க
இவன் செல்வது எங்கு தெரியுமா???? காதலியின் வீதியிலே

இவன் எழுதிய காதல் கடிதங்கள்
இன்று அவள் பிள்ளையின் கழிவு துடைக்கும் கடதாசிகள்
இவன் அனுப்பிய குறுஞ்செய்திகள்
இன்று அவள் கணவனுக்கு அனுப்பும் அன்பு மொழிகள்

ஆனால்.... அவன் பேசிய வார்த்தைகள் மட்டும்
எங்கோ காற்றில் கலைந்து,கரைந்து
சங்கமமாகிறது இவன் இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்.....

கண்ணீர் (கல்முனையான்)

Monday, September 14, 2009



எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்

சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்

என் இதயத்தின் இரத்த குழாய்களில்
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று

பரவாயில்லை என் கண் மட்டும்
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....

கவிதை (கல்முனையான்)

Monday, August 31, 2009



காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்....