சமுதாயம்(கல்முனையான்)

Tuesday, July 12, 2011


இதயத்தின் இடுக்குகளில் இலைமறையாய் வாழ்கின்ற
இளமையின் இரண்டாம் ஜென்மப் பிறப்பினைப்போல்
அடிக்கடி புனர் ஜென்ம்ம் எடுக்கின்ற ஏழைக் குலத்தின்
ஆறாவது அறிவாய் ஆக்ரோசிக்கிறது என் சமுதாயம்.

முதியோரைக் கண்டால் மரியாதை செய்து பழக்கப்பட்ட
சின்னஞ் சிறு பிள்ளைகளின் சிறகடித்த சிந்தனைகள்
இன்று கால் மேல் கால் போட்டு சரிசமமாய் பழகும்
பக்குவப்பட்ட சமூகத்தின் பாசாங்கு வேசங்களாயிற்று.

மாணாக்கராய் கண்சிமிட்டும் மனித குலக் கொழுந்துகளின்
கல்விப்பாதைகளை முளையிலேயே கிள்ளிவிட்டு
சினிமாவின் மோகத்தில் சிலிர்த்துவிட்ட மேனியினை
தட்டிக்கொடுத்துவிட்டு எட்டிப்பார்க்கும் எட்டப்ப சமூகம்.

நவீனத்து இளவல்களை நாகரீக சாயம் புசி
நாட்டு நடப்பினையும் வீட்டுப் பொறுப்பினையும்
குழியினுள்ளே இறுமாப்பாய் கொட்டிவிட்டு போதை என்ற
மாயக் குகையினிலே மல்லாக்க படுக்கவைக்கும் சமூகம்.

பெண்மை என்ற உண்மையின் வெண்மையை அறியாது
சோஷலிசக் கொடியின் கீழ் ஆடைகளின் கஞ்சத்தனமும்
பார்வைகளில் காமத்துளியை கரைத்துவிட்ட வீராப்புமாய்
வெறிச்சோடிப்போன நெஞ்சங்களாக்கும் சமூகம்

முதியோர்கள் என்ற முன் மாதிரியை முறித்துவிட்டு
அநாதை விடுதிகளில் அம்மாக்களும் அப்பாக்களும்
அலைமோதும் அருவருப்பான அடையாளங்களை
முத்திரை பதித்து முக்தி பெற்ற என் சமூகம்.

சிறார்கள், மாணாக்கர், இளைஞர்கள், பெண்கள், முதியோர்
போன்ற சமூகத்தின் ஐம் புலன்களும் மலடாகி
கொலை, கொள்ளை,கற்பழிப்பு சீழ்கள் வடிந்தோடும்
சாக்கடை சகதியாய் படிந்து கிடக்கிறது சமூகம்.

அரசியல் (கல்முனையான்)


ஆன்மாக்களை அறுத்துப் பிழிந்து மனச்சாட்சியை எரித்து
சுயநலம் என்ற அமிலமூற்றி மைபோல் குழைத்தெடுத்து
சமுதாய மேனியிலே முழுவதுமாய் பூசிவிட்டு ஏமாற்ற வெயிலினிலே
ஆயுள் வரை வெறுமையாய் நிற்கின்ற ஊமை.

வாக்குறுதிகளின் வாய்களெல்லாம் கட்டப்படும் தொழுவமாய்
ஏழைகளின் கண்ணீரால் நிரம்பிவிட்ட தடாகமாய்
பொய்யிலே மையெடுத்து ஊமையின் இமைக்கு மை பூசி
நிர்வானக் குறிக்கோளுடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெடுமரம்

கால் வயிற்றுக் கஞ்சியினையும் கனிவோடு ஏற்கின்ற
ஏழையின் எலும்புகளில் வாக்குச் சீட்டை ஒட்டிவிட்டு
பலகோடி ரூபாய்க்கு வாழ்க்கைப்பட நினைக்கின்ற கோளைகளுக்கு
மனிதனாய் பார்த்து வழங்கும் நிச்சயதார்த்த தாம்பூலத் தட்டு

நேர்மை என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுப்பதற்காய்
விலைக்கு வாங்கப்பட்ட வெள்ளைச்சட்டையுடன்
அடிதடியில் முதுமானிப் பட்டம் முடித்துவிட்டு
இரவிலே காரிகையுடன் தஞ்சம் புகும் இலவச சத்திரம்

ஆக, அரசியல் என்ற பூக்கடையில் சாக்கடையை கலந்துவிட்டு
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கின்ற பெரிய மனிதர்களின்
அந்தப்புரங்களில் ஏழையின் உண்மையான உணர்வுகள் இன்னும் கொத்தடிமையாய்
சிறைப்பிடிக்கபட்டு சின்னாபின்னமாகின்ற நிலை எப்போது மாறுமோ??