Showing posts with label பழஞ்சோறு. Show all posts
Showing posts with label பழஞ்சோறு. Show all posts

பழஞ்சோறு... (கல்முனையான்)

Tuesday, November 17, 2009

நேத்து பொரிச்ச சூடை மீனை சோத்துக்குள் புதைத்து
ஏக்கத்துடன் அண்ணார்ந்தேன் எங்க வீட்டுக் கூரையினை
வாலறுந்த பல்லி ஒன்று சண்டை போடுகிறது
தன் உணவினைத் தட்டிப்பறிக்க மற்றைய பல்லியிடம்...

பல்லியிலுமா!!! இந்தப் பாகப்பிரிவினை
பக்கத்து வீட்டு கோழியிறைச்சியின் தாழிப்பு வாசம்
என்தன் நாக்கின் நடுவிலே நயாகரா நீர்வீழ்ச்சியின்
போட்டோ கொப்பியை ஒட்டியது...

வாசத்தை மட்டும் சுவாசிக்கும் நாங்கள்
வேசத்தையிட்டு வாழ்கிறோம் மனிதர்கள் என்று
கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன் என்னை ஆவலுடன்
வெறும் ஏமாற்றத்தின் விளைநிலமாய் நான்

சுடு சோத்தின் சூட்டினிலே குளிர்காயும் ஏழைகள்
இடியப்பம் சம்பலும் அவர்களுக்கு சொர்க்கத்து உண்டிகள்
பழஞ்சோறாய் நாங்கள் வீதியிலே கொட்டிவிடப்பட
பணக்கார நாய்களெல்லாம் படையெடுத்து வருகின்றன.