வாரிசுகள் (கல்முனையான்)

Wednesday, December 29, 2010


பூரண நிலவினிலே! என் வீட்டுத் தோட்டத்தின்
எலுமிச்சை செடிகளுக்கும், எலி-மிச்சம் வைத்த வற்றாளை
கொடிகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று

அரிதாரம் பூசிக் கொண்டு அரட்டை அடிக்கின்ற
பாகற் கொடியும் அதன் இறுகிய இணைப்பில்
மயங்கி நிற்கும் மரத்துப்போன கிளிசரியா கம்பும்

தொல் பொருள் நிபுணராய் தன் உடல் பரப்பி
ஆராய்ச்சி செய்யும் வெள்ளரியும் அவருக்கும் உதவியாய்
ஒத்தாசை புரிந்து பூரித்துப்போன பூசணியும்

உரம்திண்ட தெனாவட்டில் திறன் காட்டி நிற்கின்ற
மரவள்ளியும் தரம் கெட்ட காய் என்று
தகுதியுடன் தள்ளிவைக்கப்பட்ட வெண்டிச் செடியும்

வீராவேசம் பேசி வெடுக் கென்று மிடுக்கோடு
நிற்கின்ற கத்தரியும் ஏட்டிக்கு போட்டியாய்
வளர்ந்து வயசுக்கு வந்திருந்த தக்காளியும்

வாழ்த்துக்கள் கூறி வாயாராப்புகழ.. அடுப்படியில்
இருந்து கொண்டு இன்னும் சட்டியினிலே
கனவு காண்கிறனர் வற்றாளைக் கொடியின் வாரிசுகள்.

0 comments: